Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அதிகரித்து வரும் அமெரிக்க - தமிழர் நெருக்கம்: தமிழர் அரசியலில் ஒரு புதிய பரிமாணமா?

அதிகரித்து வரும் அமெரிக்க - தமிழர் நெருக்கம்: தமிழர் அரசியலில் ஒரு புதிய பரிமாணமா?
யதீந்திரா

 

அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்டீபன் ரப் கொழும்பு வந்து சென்றதைத் தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்கச் செயலர் றோபேட் ஓ பிளேக் மற்றும் அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மனித உரிமைகளுக்கான செயலர் மரியா ஒட்ரோ (Maria Otero - Under Secretary of State for Civilian Security, Democracy, and Human Rights of the United States) ஆகியோரின் விஜயம் இடம்பெற்றுள்ளது. மரியா ஒட்ரோ அமெரிக்க ராஜாங்கச் செயலர் கொலின் பவல் 2005 இல் கொழும்பிற்கு மேற்கொண்ட பயணத்திற்கு பின்னர், வருகை தந்திருக்கும் அமெரிக்காவின் உயர்மட்ட ராஜதந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

மரியா தெற்காசிய நாடுகளுக்கான விஜயத்தின் ஒரு அங்கமாகவே இலங்கைக்கும் விஜயம் செய்திருக்கின்றார். 2009 இல் ஒபாமா நிர்வாகத்தால் மேற்படி பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட மரியா ஒட்ரோ, தனது சம்பிராத பூர்வமான (inaugural trip) பயணமாகவே இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றார்.

அமெரிக்கா கொழும்பின்மீது தனது பிடியை இறுக்கிவரும் சூழலில் மேற்படி இருவரது பயணமும் மேலும் ஒரு படி முன்னேறிய அழுத்தத்தை வழங்கியிருக்கின்றது. அடுத்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை நெருக்கடிகளை சந்திக்கலாம் என்னும் ஊகங்கள் வெளிவந்து கொண்டிருந்த சூழலில், மேற்படி இருவரதும் பயணம் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி இட்டிருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிப்பது உறுதி என்னும் செய்தியை மகிந்தவுடனான சந்திப்பின்போது இருவரும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். கொழும்பைப் பொறுத்தவரையில் இது ஒரு ராஜதந்திர பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.

நாம் முன்னைய கட்டுரையில் பார்த்தவாறு, மகிந்த அரசு அதிகரித்துவரும் அமெரிக்க அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஒரு எதிர் ராஜதந்திரமாக கையாள முயல்கிறது. ஆனால் அதுவே தற்போது அரசிற்கான பிறிதொரு பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. கொழும்பு வீசிய பூமறாங்கையே அமெரிக்கா திருப்பி கொழும்பு மீது வீசியிருக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டிருக்கும் சிபார்சுகளை வரவேற்றிருக்கும் மரியா ஒட்ரோ அதனை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். வழமையாக வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பின்னர் நழுவிக் கொள்வதை ஒரு தந்திரோபாயமாகக் கைக்கொண்டு வரும் கொழும்பிற்கு இது புதிய நெருக்கடிகளை கொடுத்திருக்கிறது.

நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு, இராணுவ மயமாக்கத்தை இல்லாமலாக்குதல், சுதந்திர ஊடகம் (reconciliation, devolution of authority, demilitarization, rule of law, media freedom) போன்ற விடயங்கள் தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னேற்றகரமான சிபார்சுகளை வழங்கியிருக்கிறது. இம்மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே மரியா ஒட்ரோ மேற்படி விடயத்தை தெரிவித்திருந்தார்.

மேற்படி சந்திப்பில் கருத்துத் தெரிவித்த றொபேட் ஓ பிளேக், இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் இன்னும் பல அறிக்கைகள் இருக்கின்றன, குறிப்பாக ஜ.நா நிபுணர் குழுவின் அறிக்கை பல விடயங்களை சுட்டிக் காட்டியிருக்கிறது. எனவே எங்களுடைய பார்வையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சில குற்றச்சாட்டுக்களை போதுமான வகையில் உள்ளடக்கியிருக்கவில்லை (LLRC report did not cover in sufficient detail some of those allegations) என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பிளேக் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கும்போதே இடையில் குறிக்கிட்ட மரியா ஒட்ரோ, குறித்த அறிக்கை நல்லிணக்கம் தொடர்பில் சில முக்கியமான, சாதகமான பரிந்துரைகளை வழங்கியிருப்பதாகவே நாங்கள் நம்புகிறோம் என்றார். (If I can just add to that.  In that context it is also important to point out that we believe that report makes some important and positive recommendations in the areas of reconciliation)

அமெரிக்கா இலங்கையின் உள்ளக கட்டமைப்பிற்குள் பொருத்தமானதொரு நல்லிணக்கதிற்கான பொறிமுறை அவசியம் என்பதையே வலியுறுத்தியிருக்கின்றது. ஆனால் மகிந்த அரசு அத்தகையதொரு பொறிமுறையை ஏற்படுத்துவதில் காட்டிவரும் அசமந்தப் போக்கு அல்லது விரும்பமின்மையே இங்கு அழுத்தத்திற்கான காரணங்களாக இருக்கின்றன. அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மகிந்தவிற்கு உத்தியோகபூர்வமாக தெரிவித்த பின்னணியிலேயே அரசு, அவசரமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென இராணுவ நீதிமன்றமொன்றை அமைத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

பிளேக் மற்றும் ஒட்ரோ விஜயத்தின் போது நிகழ்ந்துள்ள பிறிதொரு முக்கியமான விடயம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை தெரிவித்திருக்கின்றது. பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு பேர் கொடுப்பதில் ஏலவே கூட்டமைப்பு இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கும்; நிலையிலேயே பிளேக் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றார். தெரிவுக் குழுவிற்கு கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளை நியமிக்காத வரையில் பேசுவதில்லை என்று அரசு கூறிவரும் நிலையில்தான், த.தே.கூட்டமைப்புடன் இணங்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைய வேண்டுமென்று பிளேக் தெரிவித்திருக்கின்றார்.

அமெரிக்காவின் மேற்படி நிலைப்பாடும் அரசு எதிர்பார்க்காத ஒன்றாகும். இலங்கை ஒரு பல்லின நாடு என்ற வகையில், இலங்கையின் எதிர்காலம் தொடர்பானதொரு எந்தவொரு முடிவும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம்தான் மெற்கொள்ள முடியும் என்று கூறுவதற்கான நியாயப்பாட்டை அரசு கொண்டுள்ளது. இதனை எந்தவொரு அழுத்தத்தாலும் நிராகரிக்கவும் முடியாது. ஆனால் அவை வெறுமனே காலத்தை இழுத்தடிக்கும் ஒரு தந்திரோபாயமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் தமிழர் தரப்பின் கவலைகள் நியாயமானவை என்பதை அமெரிக்கா விளங்கிக் கொண்டுள்ளது. மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதை கடுமையாக எதிர்த்து வரும் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் அங்கம் வகிக்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில், த.தே.கூட்டமைப்பு நியாயத்தை எதிர்பார்ப்பது கடினமானது. இந்த பின்னணியில் அமெரிக்காவின் அறிவிப்பு அரசுக்கு மேலும் நெருக்கடிகளை கொடுத்துள்ளது.

அமெரிக்கா ஏன் இந்தளவு தூரம் தமிழர் பிரச்சனையில் அக்கறை எடுத்துக் கொள்கின்றது? சிங்கள தேசியவாதிகள் மத்தியில் அமெரிக்காவின் மேற்படி நிலைப்பாட்டிற்கு பின்னால் இந்தியா மறைமுகமாக இயங்குகிறதோ என்ற சந்தேகம் இல்லாமலில்லை. மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் அப்படியொரு கேள்வியும் கேட்கப்பட்டது - நீங்கள் இந்தியாவின் கொல்லைப்புறமாக இருக்கவில்லை என்பதை எவ்வாறு நம்ப முடியும்? - ஊடகவிலாளரின் கேள்விக்கு பதிலளித்த பிளேக் - அதனை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் இலங்கையின், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தப்படுவது தொடர்பில் பல நாடுகளுடன் ஆலோசிக்கின்றோம்.

அமெரிக்காவுடன், மியன்மார் புதிய உறவுகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இலங்கை அமெரிக்க நிகழ்சி நிரலுக்கு எதிராக பயணிக்கின்றதா? இது தொடர்பில் அமெரிக்காவிடம் ஏதும் ஆதாரபூர்வமான தகவல்கள் இருக்கின்றனவா? அல்லது மகிந்த அரசு யுத்தத்தின் தீர்க்கமான கட்டத்தில் அமெரிக்காவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியிருக்கின்றதா? அல்லது மேற்படி ஊடகவியலாளர் கேட்டது போன்று இந்தியாவின் கொல்லைப்புற நகர்வுகளில் ஒரு பகுதியாகத்தான் அமெரிக்க அழுத்தங்கள் அதிகரித்துச் செல்கின்றனவா?

பதில் எதுவாக இருப்பினும், அமெரிக்கா தமிழர் பிர்சனையில் கரிசனை கொண்டிருப்பதானது, தமிழ் பிரச்சனைக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. இதுவரை தமிழர் பிரச்சனையை இந்தியா கையாண்டு வந்த நிலையில் அது தற்போது டில்லியில் இருந்து வாசிங்டனுக்கு நகர்ந்துள்ளது. இது தமிழர் பிரச்சனை சர்வதேச அவதானத்திற்குள் சென்றுள்ளதையே காட்டி நிற்கிறது. ஆனால் இதில் ஒரு ஆபத்தும் உண்டு. நாம் முன்னைய கட்டுரையில் பார்த்தவாறு, தமிழர் அரசியல் ஒரு மிகப் பெரிய சதுரங்கப் பலகைக்கு நகர்ந்துள்ளது. அதில் நாங்கள் விளையாடுபவர்கள் அல்ல, வெறும் காய்கள் மட்டும்தான். இதனை தமிழர் தலைமை சரியாக கையாளாதுவிடின் மீண்டும் பாதிக்கப்படுவது தமிழர்களாகவே இருக்கும், முன்னர் நடந்தது போல்.   

2/19/2012 4:07:17 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

Author's contentions that US has adopted an favorable policy towards Tamil and the center of gravity of external influence has shifted from India to US are not acceptable and are wrong.
Bottomline is that Rajapakshe wants to maintian a distinct tilt towards China at least until the time that Tamil genocide is effectively completed. US and India would like to have united SL firmly in their combine. There are two main problems, 1) Rajapaksha's preference of China 2) Lingering Tamil problem.

I do not think Tamil rights appears as one of the fundamental issues US Lanka-policy at all. Secondly, it is diffuclt to believe India will cede the initiatives in Lanka to US. It just might be the case of typical Indian deception of working behind the curtains.

Ramesh, Chennai
 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்