தங்களின் தண்டைக்கான காலத்தைக் குறைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இம்மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மூவரின் கருணை மனுக்களை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நிராகரித்ததை அடுத்து, இம்மூவரும் தங்களின் தண்டனைக் காலத்தைக் குறைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக தாங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால் தங்களின் தண்டனையைக் குறைக்குமாறு அவரகள் இம்மனுவில் தெரிவித்திருந்தனர்.
இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இம்மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்க இடைக்கால தடைவிதித்திருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் இத்மூவரும் தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மூவரின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும் எனவும், இவர்களுக்கான தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக் கூடாது என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இவரின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளாகி வரும் இம்மூவரின் மனு தொடர்பிலான விசாரணையை நடத்த தீர்மானம் செய்துள்ளது. இதன்படி அம்மனு மீதான விசாரணை எதிர்வரும் 10ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.