திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் தமிழீழ விடுதலை புலிகள் இயகத்தைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக என சிறிலங்கா பொலிஸரின் குரல்தரவல்ல அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
'இச்சந்தேச நபர்கள் மூவருக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான தொடர்பை நாம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேவேளை அதற்கான சாத்தியங்களையும் நாங்கள் நிராகரிக்கவும் இல்லை. இது தொடர்பிலான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன' என அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இச்சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்;.
ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி குச்சவெளி பெரியகுளம் பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இவரின் சடலத்திற்கு அருகில் இருந்து எல்.ரீ.ரீ.ஈ. என எழுதப்பட்ட காகிதம் ஒன்றையும் சிறிலங்கா பொலிஸார் கண்டெடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மூதூரைச் சேர்ந்த ரகு நடன் அல்லது முத்து என அடையாளம் காணப்பட்டுள்ள இவர், கடந்த பல வருடங்களாக ஈ.பி.டி.பி.யின் உறுப்பினராக செயற்பட்டு வந்தார். அத்துடன், சிறிலங்கா படைத்தரப்பின் உளவாளியாகவும் இவர் செயற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவரும் நிலையில், இச்சந்தேக நபர்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா எனவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.