"நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மஹிந்த அரசு உடன் அமுல்படுத்தித் தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையேல், இனிவரும் காலங்கள் மஹிந்த அரசுக்கு அக்கினிப் பரீட்சையாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை." இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கா பிரேரணை நேற்று ஜெனிவாவில் வெற்றிகரமாக நிறைவேறியது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
"இலங்கை அரசு அதாவது மஹிந்த அரசு செய்வோம் எனக் கூறியதை செய்து முடியுங்கள் என்றே ஜெனிவாத் தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது.
அப்படியாயின், இதனைச் செய்து முடிப்பதற்கு மஹிந்த அரசு அடம்பிடிப்பது ஏன்? நீதியை வலியுறுத்தும் பிரேரணையை அரசு எதிர்த்ததன் மூலம் அதன் கபடத்தனம் இன்று முழு உலகத்திற்கும் அம்பலமாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் நாட்டைக் காட்டிக்கொடுக்கின்றன என விமர்சிக்கும் அரச தரப்பினர், இந்த நாட்டை மஹிந்தவும், கோட்டாபயவுமே அமெரிக்காவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். யுத்தகாலத்தில் இருவரும் இணைந்து அமெரிக்காவுடன் பல உடன்படிக்கைகளைச் கைச்சாத்திட்டுள்ளனர். அதன் பிரதிபலன்களைத்தான் இன்று அரசு அணுஅணுவாக அனுபவிக்கின்றது.
அமெரிக்காவுக்கு எதிராக இந்த மஹிந்த அரசை விட இடதுசாரிகளுக்கு போராடத் தெரியும். ஆனால், முதுகெலும்பு இல்லாத மனிதாபிமானமற்ற இந்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அளவுக்கு நாம் இன்னும் தரம்தாழ்ந்து விடவில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அரசு உடன் அமுல்படுத்தித் தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையேல், இனிவரும் காலங்கள் மஹிந்த அரசுக்கு அக்கினிப் பரீட்சையாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை" என்று கூறினார் ஐக்கிய சோசலிசக்கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய.