இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க உறுப்பினர்கள் கலந்து கொள்ளாது விட்டாலும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் போருக்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இந்தியக் குழு நல்ல திருப்தி அடைந்துள்ளதாக சிறிலங்காவின் பிரதி அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
'இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களுக்குள் அரசாங்கம் பல மக்களை மீளக் குடியமர்த்தியுள்ளது. தமது கிராமங்களில் மீளக்குடியேற முடியாமல் மிகவும் சொற்பமானவர்களே இருக்கிறார்கள். போரின் போது இடம்பெயர்ந்த மக்கள் எவரையும் நாங்கள் நிர்ப்பந்தப்படுத்தி முகாம்களில் தங்கவைக்கவில்லை. பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்பட்ட 4.6 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட புத்தூர் குட்டிமடம் குளத்தையும் இந்திய குழுவினர் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா.' இவ்வாறு இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
அதேவேளை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தியுள்ளதாக பி.பி.சி.யின் சார்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, அதற்காகத்தான் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அரசாங்கம் அமைத்திருப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்குழுவில் பங்குபற்றி தமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்தியக் குழுவின் விஜயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'வடக்குக் கிழக்கு நிலைமைகளை அறியவும், இலங்கை தொடர்பான நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தவும் இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் இலங்கைக்கான விஜயம் நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. இவர்களின் இலங்கை விஜயம் காலத்துக்குத் தேவையான ஒரு நிகழ்வாகும்.
இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை நேரடியாகச் சென்று அங்குள்ள உண்மையான நிலைமையைப் பார்க்க அவர்களுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் அந்தப் பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. பாலஸ்தீனத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ள போதிலும், அவர்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இதுவரை முடிவில்லை.
ஆனால் இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களில் 95 வீதமானவர்கள் ஏற்கனவே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் 3500 பேரே மீள்குடியமர்த்தப்பட உள்ளதாக நாம் கூறி வந்தோம். அதனை இந்தியக் குழுவினருக்கு நேரடியாகவே அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை அவர்களே நேரில் போய் அறிந்து கொண்டனர்.
அதன்படி மெனிக்பாமில் 1800 பேரும் சம்பூரில் 1600 பேருமே இன்னும் மீள்குடியமர்த்தப்பட உள்ளனர் என்பதை அவர்களே உறுதிப்படுத்துகின்றனர். அதன்படி நாம் கூறியதை விடக் குறைவாக 3400 பேரே இன்னும் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர்.
இவ்வாறு மீளக்குடியேற்றப்பட்டவர்கள் அவர்களுடைய சொந்த இடங்களிலா மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்ற ஒரு கேள்வி நிலை இருந்தது. அதற்கான தெளிவையும் நேரடியாகவே அறிந்து கொள்ள இந்தியக் குழுவினருக்கு வாய்ப்புக் கிட்டியது. 200 பேரே மாற்று இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் பூர்த்தி அடையாமையே இதற்கான காரணமாகும். இப்பணிகள் முடிவடைந்ததும் அவர்களும் சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்படுவர்.
இந்திய அரசாங்கத்தின் உதவியால் வடக்கில் 41 ஆயிரம் வீடுகளும், கிழக்கில் 9 ஆயிரம் வீடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வழங்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களை இந்திய குழுவினர் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இவ்வாறு கலந்துரையாடியதன் மூலம் அம்மக்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் படையினர் மீதும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.
உங்களை கொழும்புச் செல்லவிடாமல் சிறிலங்கா அரசாங்கமோ, படையினரே தடை விதித்துள்ளார்களா என்று இந்தியக் குழுவினர் அவர்களிடம் நேரடியாகவே கேட்டனர். அவ்வாறு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியக் குழுவில் தமது கட்சிப் பிரதிநிதிகளை இடம்பெறாமல் செய்தமை ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் அரசியல் நோக்கமாகவே இருக்கலாம். தமிழ்நாடு அல்ல உலகிலுள்ள எந்த நாட்டினர் வந்தாலும் சுதந்திரமாக வடக்குக் கிழக்கிற்கு சென்று உண்மை நிலைகளைக் கண்டறிந்து கொள்ளலாம்.
வடக்குக் கிழக்கில் உண்மையான நோக்கத்துடன் அனைத்து விடயங்களையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதனால் யாராவது வந்து பார்ப்பதானால் அதனை நாம் வரவேற்கின்றோம்.
எமது செயற்பாடுகளின் உண்மை நிலையை உலக நாடுகள் அறிந்து கொள்ள அது வழிவகுக்கும். எனவே எவர் வருவதானாலும் அவர்களை வரவேற்பதேயன்றி அது குறித்து எவ்வித அச்சமும் கொள்ள வேண்டிய அவசியம் எமக்கில்லை.
இரண்டு வருடம் 11 மாதம் என்ற குறுகிய காலக்கெடுவில் மீள்குடியேற்றத்தை பூர்த்தி அடையும் கட்டத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன் பாரிய வீதி அபிவிருத்தி, மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளமை கண்டு இந்தியக் குழுவினர் பாராட்டுத் தெரிவிக்கின்றனர். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த இது ஒரு சிறந்த சான்றாக அமைகின்றது.
வடக்குக் கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விளங்கப்படுத்தி இது தொடர்பில் சிறந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் முக்கியமானவர்கள். தமிழ் சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் இலங்கை தொடர்பான நல்லபிப்பிராயத்தை இந்தியா அதிகரிக்க முடியும்'.
வடக்கில் நடைபெறும் அபிவிருத்திகள் போதுமானதாக இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவந்த பின்னர் தெரிவித்த கருத்தானது ஆதாரங்களின்றி வெளியிடப்பட்ட கருத்து. இந்தக் கருத்து இலங்கைக்கு சர்வதேச ரீதியில் நற்பெயரைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
‘திவிநெகும’ திட்டம் போன்ற பொருளாதாரத் திட்டங்கள் ஊடாக சிறந்த பொருளாதார திட்டங்களை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ளார். இவ்வாறான திட்டங்களின் உண்மையான நிலைமையை ரணில் விக்ரமசிங்க புரிந்து கொள்ளவில்லை" என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.