வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் சிறை அதிகாரிகளால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்ட மார்ச் மாதம் 8ஆம் திகதிக்கு முன்தினம் இரவு பெண் கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு மேடையேற்றப்பட இருந்த நாடகம் ஒன்றின் ஒத்திகைக்காக எனக்கூறி பெண் சிறைக்கைதிகள் சிலரை ஏனைய பெண் கைதிகளிடமிருந்து வேறாக்கி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மை குறித்து அதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னரே தெளிவுபடுத்திக் கொள்ள முடியுமென சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பீ.டபிள்யூ.கொடிப்பிலி கூறியுள்ளார்.
சிறிலங்காவின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீதான அடிப்படை உரிமைகள் மீறப்படும் சம்பவம் இடம்பெற்று வருவதாக மனிதவுரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.