இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எழுப்பிய கேள்விகளுக்கு சிறிலங்கா அரசதரப்பு உரிய முறையில் பதிலளிக்க முடியாமல் சங்கடத்துக்கு உள்ளாகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சிறிலங்காவின் நாடாளுமன்றத்திற்குச் சென்றிருந்தது. இதன்போது அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுக்களை இந்தியக் குழு நடத்தியிருந்த போதே இவ்வாறான ஒரு சங்கடமான நிலைக்கு சிறிலங்கா அரசதரப்பு உள்ளாகியுள்ளது.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் காலத்தை இழுத்தடித்து வருவது குறித்து பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியுள்ளன.
இதன்போது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும் இந்திய நாடாளுமன்றக் குழு சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் இந்தியக் குழு முழுமையாக ஆதரித்துள்ளது.
அதேவேளை, இலங்கை அரசியல் விவகாரங்கள் குறித்து இக்குழுவினர் தொடர்ச்சியாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் சிறிலங்கா அரசதரப்பு சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளது.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.