ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்து உடனடியாக விலகுவதற்கான எண்ணம் எதுவும் தனது கட்சிக்கு இல்லை என சிறிலங்காவின் நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் இன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தம்புள்ள பள்ளிவாசல் விவாரம் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமாக தீர்க்கவே முஸ்லிம் காங்கிரஸ் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வது குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுவின் கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் எனவும், இவ்விவகாரம் குறித்து அரசாங்கம் காத்திரமான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்காத நிலையில், அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது தொடர்பில் கேள்வி எழுப்பப்படலாம் எனவும் ஊகம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இவ்விவகாரத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு அரசியல் தலைவர்கள் சிலர் தங்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தை பௌத்த மதகுருமாருடன் இணைந்து ஆளுந்தரப்பு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் பெரேரா முன்னெடுத்திருந்த போதிலும், இச்சம்பவம் தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை என்பது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்திகளை ஏற்படுத்தியிருந்தது.
அத்துடன், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிறிலங்கா பிரதமரின் தலைமையில் நேற்று முன்தினம் கம்பளையில் இடம்பெற்ற கூட்டத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் கலந்து கொள்ளாத நிலையில், அக்கூட்டத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் கலந்து கொண்டதாகவும், அவர்களின் சம்மதத்துடன் இப்பள்ளிவாசலை வேறிடத்துக்கு மாற்ற இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட உண்மைக்குப் புறம்பான அறிக்கை தொடர்பிலும் இக்கட்சி உறுப்பினர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் கடும் விவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.