இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதலமைச்சர்களின் மாநாடு நாளை டெல்லியில் இடம்பெறவுள்ளது.
இம்மாநாட்டில் தமிழ் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மற்றும் ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கின்றனர்.
தமிழக முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து விவாதிப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இவ்விவகாரம் குறித்து தனியாக ஒரு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற பிரதமர் மன்மோகன் சிங் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து விவாதிக்க வரும் அடுத்த மாதம் 05ஆம் திகதி மாநில முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், நாளை இடம்பெறும் இம்மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு, பொலிஸ் துறை மறுசீரமைப்பு, தீவிரவாத ஒழிப்பு, நக்சலைட் ஒடுக்கம், ஒடிசாவில் சட்டமன்ற உறுப்பினர் கடத்தல், கடலோர பாதுகாப்பு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உறவு குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.