சுதந்திர தேசமாக விடுதலை பெற்றுள்ள தென் சூடானில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்காரியாலயம் ஒன்றை அமைக்கும் பொறுப்பினை, அவுஸ்திலியாவின் சிட்னி நகரில் வாழும் தமிழர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக நாதம் ஊடகசேவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை சிட்னியின் கொம்புஷ் ஆண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட மக்களே இப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கருத்துரைகள், மக்களின் கேள்விகளுக்கான விளக்கவுரைகள் என இடம்பெற்றிருந்த இந்த மக்கள் அரங்கம் நிகழ்வில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் அவர்கள் தம்மால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்ட முன்னெடுப்புகள் குறித்து எடுத்து விளக்கியிருந்தார்.
மேலும் சிறிலங்கா எனும் அரச கட்டமைப்புக்குள், தமிழர்களுக்குரிய தீர்வைப் பெறுவது என்பது ஒரு பகல் கனவென தெரிவித்த ருத்திரகுமாரன் அவர்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நிரந்த தீர்வாக தமிழீழம் என்ற இலக்கை நோக்கி போராட்டத்தை எடுத்து செல்லும் என உறுதிபடத் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைச் சபையில் பங்குகொண்டபோது, தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும், ஐ.நா மனித உரிமைச் சபையினை மையமாக கொண்டு தமிழீழ அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்தும் துணை வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் தனதுரையில் விளக்கியிருந்தார்.
தமிழீழ அரசாங்கத்தின் வேலை திட்டங்கள் பற்றி விளக்கியதோடு, மக்களின் நிதி பங்களிப்பின் அவசியத்தையும் நா.த.அரசாங்கத்தின் துணை பிரதமரும், நிதி அமைச்சருமான பேராசிரியர் இளையதம்பி செல்வநாதன் அவர்கள் தனதுரையில் வலியுறுத்தியிருந்தார்.
கருத்துரைகளைத் தொடர்ந்து மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்வாக, இறுதி அரங்கு விரிந்திருந்தது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவை உறுப்பினர்களான சிறிசுதர்சன், தர்சன், யோகன் ஆகியோரும் பங்கு இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். நிகழ்வில் திரு ஸ்கந்தகுமார் அவர்கள் அவுஸ்திரேலியா தேசிய கொடியினையும், திரு சிவா அவர்கள் தமிழீழ தேசிய கொடியினையும் ஏற்றியிருந்தனர். திரு பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையினை வழங்கியிருந்தார்.
தென் சூடானில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்காரியாலயம் அமைத்து கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிட்னிவாழ் தமிழர்களின் நடவடிக்கை குறித்து, நிதி அமைச்சர் பேராசிரியர் இளையதம்பி செல்வநாதன் அவர்கள் தெரிவிக்கையில்:
நிதி பற்றாக்குறைவியினால், தென் சூடானில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் காரியாலயம் அமைக்கும் முயற்சி பின்தள்ளிப் போடப்பட்டு இருப்பதாக தெரிவித்தபோது, அரங்கில் இருந்த பலரும் தமக்கு இது குறித்து அறியத் தராமைக்கு வருத்தம் தெரிவித்ததுடன் அதனை நிறுவுவதற்கான பணியினை மேற்கொள்ளும் பொருட்டு நிதி திரட்டுவதற்குரிய ஒரு குழுவினையும் அமைத்துள்ளனர்.
மேலும் தமிழர் ஒருவர், பத்தாயிரம் டொலர்களை நன்கொடையாக அன்பளிப்பு செய்தார். தொடர்ந்து பலரும் மனமுவந்து பங்களிப்பை வழங்கியதாக நாதம் ஊடகசேவை தெரிவித்துள்ளது.
மக்களின் இத்தகைய செயற்பாடுகள் சுதந்திர தமிழீழத்திற்கான அங்கீகாரத்தினை வேண்டும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வலுவூட்டுவதாக அமையும் எனவும் நாதம் ஊடகசேவை தெரிவித்துள்ளது.