இந்திய இராணுவத்திடம் போதிய தளவாடங்கள் இல்லாமல் பலவீனமான நிலையில் இராணுவம் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்திய படைத்துறைத் தளபதி வி.கே.சிங் எழுதியுள்ள கடிதம் ஊடகங்களுக்கு கசிந்ததையடுத்து இந்திய அரசியலில் பெரும் புயல் கிளம்பியிருக்கின்றது. இந்திய படைத்துறைத் தளபதியை பதவியிலிருந்து நீக்கக்கோரி இந்திய பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் இன்று காலை கோஷம் எழுப்பப்பட்டது.
தொடர்ச்சியாக சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் ஒருவராகவே இந்தியப் படைத்துறைத் தளபதி இருந்து வருகின்றார். வயது சர்ச்சை, 14 கோடி பேரம், தற்போது பிரதருக்கு அனுப்பிய கடிதம் என பல்வேறு சர்ச்சைகள் கிளப்பி வருவதால் மத்திய அரசு பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. படைத்துறைத் தளபதியை பதவியிலிருந்து நீக்குமாறு இந்திய அரசுக்கு அழுத்தங்களும் அதிகரித்திருப்பதால் இந்திய அரசியலில் இந்தப் பிரச்சினை சூடுகிளப்பத் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என இந்தியப் பாராளுமன்றத்தில் பா.ஜ.க தரப்பில் வெங்கையா நாயுடு கோரினார். இதற்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.,அந்தோணி கூறுகையில் இது தொடர்பான விபரம் எனக்கு தெரியும். இராணுவ பாதுகாப்பு தொடர்பான விஷயத்தை வெளிப்படையாக பேச முடியாது. இருப்பினும் விரைவில் விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.