சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் அளித்த விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த ஜான் என அழைக்கப்படும் அந்தோனி ராஜப்புவின் மனைவியான வெரோணிக்கா சிறிலஙகாப் புலனாய்வுத் துறையினரின் தீவிர விசாரனைகளுக்கு உள்ளாகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தமது மன்னார் மாவட்டச் செய்தியாளரை மேற்கோள் காட்டி வெரோணிக்காவின் வாக்குமூலத்தை நாதம் ஊடக வேவை வெளியிட்டுள்ளது.
'மன்னார் மடுபிரதேசச் செயலகத்தில் 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி நல்லினக்க ஆணைக்குழுவின் சாட்சியம் அளித்திருந்தேன்.
எனது கணவரின் பெயர் ஜான் என அழைக்கப்படும் அந்தோனி ராஜப்பு (வயது 40). கடந்த 18.05.2009 அன்று முல்லைத்தீவில் வைத்து சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்ததார். அதனை தான் நேரில் பார்த்தேன். ஆனால் தற்போது அவர் எங்குள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை.
யுத்தம் காரணமாக கடந்த 16.05.2009 இல் முள்ளிவாய்க்காலிருந்து முல்லைத்தீவு நோக்கி எனது கணவருடன் நானும் 3 பிள்ளைகளும் வந்து கொண்டிருந்த போது சனநெரிசலின் நிமித்தம் எனது கணவரை தவறவிட்டு விட்டேன். இருப்பினும் 17.05.2009 இல் எங்களது இருப்பிடம் தேடி எனது கணவர் வந்தடைந்தார்.
கடந்த 18.05.2009 இல் கத்தோலிக்க அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் எனது கணவரும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான இளம்பருதி, வேலவன், பாபு, ஈழவன், ரூபன், குமரன் ஆகியோரை சிறிலங்கா படைத்தரப்பினர் அழைத்துச் சென்றனர். இதனை நான் நேரில் பார்த்திருந்தேன். சிறிலங்கா படைத்தரப்பினர் அவர்களை பேருந்து ஒன்றில் ஏற்றிக் கொண்டு சென்றிருந்தார்கள். இதன் பின்னர் அவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் நான் சாட்சியம் வழங்கியதைத் தொடர்ந்து, அன்று முதல் இன்று வரை சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரிகள் மன்னார் மடு பெரிய பண்டிவிருச்சான் கிராமத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்து என்னிடம் விசாரனைகளை மேற்கொள்ளுகின்றனர்.
அதில் குறிப்பிட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் தலைமை தாங்கி அழைத்துச் சென்ற கத்தோலிக்க அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்பு தொடர்பாக தீவிர விசாரனைகளை மேற்கொண்டனர். தனது கணவர் தொடர்பாக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அருட்தந்தை தொடர்பாகவும் அதனை நேரில் பார்தததாக கூறப்படும் சாட்சியங்கள் தொடர்பாகவும் தொடர்ந்தும் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டன' என என வெரோணிக்கா நாதம் ஊடக சேவையின் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
அதேவளை விடுதலைப் புலிகளின் முக்கியதர்களுடைய மனைவி, பிள்ளைகளிடத்தில் சிறிலங்காப் புலனாய்வுத்துரையினரும், படையினரும் தொடர்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் நாதம் ஊடக சேவை மேலும் தெரிவித்துள்ளது.