'இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் இடம்பெறும் புனரமைப்;புப் பணிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவது முக்கியம் அல்ல. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை சந்திப்பதே முக்கியம். அதற்காக வற்புறுத்தியுள்ளோம்.'
இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இலங்கைக்கு செல்லவுள்ள நிலையில், அவர்களிடம் நேற்று மத்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் பயணத் திட்டம் பற்றிய நிகழ்ச்சி நிரல்களை விளக்கிக் கூறினார்.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாமார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து பேசுவது குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், எதிர்பவரும் 21ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதியுடன் விருந்துபசாரக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றியும் இதன்போது கூறப்பட்டது. இதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இக்குழுவில் இருந்து அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சியிகள் வெளியேறியுள்ள நிலையில், சிறிலங்கா ஜனாதிபதியுடனதன விருந்துபசார நிகழ்ச்சியை மாற்ற வேண்டும் என்று இக்குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள்.
சிறிலங்கா ஜனாதிபதியுடன் எதிர்வரும் 21ஆம் திகதி காலை சாப்பிடுவதற்கு பதிலாக, 20ஆம் திகதி மாலை அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யும் படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், தொடரூந்து திட்டப் பணிகளை பார்வையிடும் நிகழ்ச்சியை இரத்துச் செய்து விட்டு மெனிக்பாம் முகாம்களில் உள்ள தமிழ் மக்களைச் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.