'தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசுக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால், அரசு அதனை உதாசீனம் செய்தது. இனிமேலும் தமிழீழ விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி தமிழ் மக்களுடைய தேசியப் பிரச்சினையிலிருந்து அரசு நழுவமுடியாது. தமிழருக்கு நியாயமான தீர்வை வழங்க அரசு முன்வரவேண்டும்'
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 35ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருகோணமலை நகராட்சி மன்ற மண்டபத்தில் நேற்று மாலை நினைவு தின நிகழ்வு இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இன்றைக்கு நாங்கள் தந்தை செல்வாவின் 35ஆவது நினைவு தினத்தை அனுஷ்டிக்கின்றோம். 35 வருடங்கள் கடந்தபோதும் தந்தை செல்வாவின் வழிகாட்டலையும், அவரின் கொள்கையையுமே தமிழ் மக்கள் ஏற்றுவருகிறார்கள்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் கூட கிழக்கில் வரவில்லை. ஆனால், இன்று 5 பேர் உள்ளனர். இதற்குத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும் காரணமாகும். இதனை தந்தை செல்வா எப்போதே எடுத்துரைத்தார். சிங்களத் தலைவர்கள் தந்தை செல்வாவை மதித்தார்கள். முஸ்லிம் மக்களும் அவரை மதித்தார்கள். அவர் தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவர்.
அவருடைய கொள்கைகள் தெளிவாக இருந்தன. தாங்கள் வாழ்ந்த சரித்திர இடங்களில் சுயமரியாதை, பாதுகாப்பு, அரசியல், பொருளாதார, கலாசார விடயங்கள் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சுயநிர்ணய உரிமையுடன் தமிழ் பேசும் மக்கள் வாழவேண்டும் என்பதில் அவர் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார்.
சமஷ்டி ஆட்சியை தந்தை செல்வா முதலில் முன்வைக்கவில்லை. கண்டிய சிங்களவர்கள்தான் 1928, 1930ஆம் ஆண்டுகளில் இதனை முன்வைத்தார்கள்.
சுதந்திர இலங்கையில் ஒற்றை ஆட்சியின் கீழ் ஏனைய மக்கள் சுதந்திரமாக வாழ முடியாது. அதனால் சமஷ்டி ஆட்சியின் அடிப்படையில் பண்டா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்று பல ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன. எனினும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால்தான் ஆயுதப் போராட்டம் உருவானது.
தந்தை செல்வா ஆயுதப் போராட்டத்தை ஒருபோதும் விரும்பவில்லை. ஆரம்பமான ஆயுதப் போராட்டமும், முடிவுக்கு வந்துவிட்டது. சமாதான பூர்வமாக தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனினும், இதனை இலங்கை அரசு சரியாக அணுக முன்வரவில்லை.
ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பல நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்கின. அந்த நாடுகளுக்குத் தமிழர் பிரச்சினையைத் தாம் தீர்த்துவைப்பதாக இலங்கை அரசு வாக்குறுதியளித்தன. ஆனால், ஆயுதப் போராட்டம் முடிந்ததும் தேசிய பிரச்சினை தீர்ந்தது என அரசு நினைத்தது. அதனால்தான் ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரவேண்டிய நிலை ஏற்பட்டது.
சுமார் 60 வருட காலமாக எமது தேசியப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. எமது தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசுக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால், அதனை அரசு உதாசீனம் செய்தது. இனிமேலும் தமிழீழ விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி தமிழ் மக்களுடைய தேசியப் பிரச்சினையிலிருந்து அரசு நழுவமுடியாது. தமிழருக்கு நியாயமான தீர்வை வழங்க அரசு முன்வர வேண்டும் என சம்பந்தன் தனதுரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நகரசபைத் தலைவர் க.செல்வராஜா (சுப்ரா) உட்படப் பலர் உரையாற்றினர்.