காலத்துக்குப் பொருத்தமான இப்பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பரிசீலனைக்கு உட்படுத்தி ஏற்றுக்கொள்ளவேண்டும். இது சிறிலங்கா அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையை ஊக்குவிக்கும் ஒரு தீர்மானம் ஆகும். நாட்டில் நிரந்தரமான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த தீர்மானம் உதவும். இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இது உதவும் நோக்கைக் கொண்டது.
இவ்வாறு ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் Eileen Chamberlain Donahoe ஜெனிவாவில் நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்த அமர்வில் இலங்கை மீதான பிரேரணையை சமர்ப்பித்து உரைநிகழ்த்தும்போது தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறுதலையும் ஊக்குவிக்கும் பொருட்டு அமெரிக்கா இத்தீர்மானங்களின் வரைபை பரிசீலனைக்காகவும், ஒப்புதலுக்காகவும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த வரைவுத் திட்டத்துக்கு 40 உப அனுசரணையாளர்களின் பெரும் ஆதரவு உண்டு. சில திருத்தங்களுடன் வரைவுத்திட்ட நகல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் நீண்டகால, துயரமான போர் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இலங்கை மக்களுக்கு சமாதானத்தோடுகூடிய ஓர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மற்றைய இதுபோன்ற அக்கறைகொண்ட நாடுகளைப்போன்று எனது அரசும் சிறலங்காவுடன் இணைந்து செயற்பட்டுவந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக எனது அரசு, இதன்பொருட்டு இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு வந்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் நிரந்தர தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும், கடப்பாடுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் இலங்கைக்குக் கால அவகாசமிருந்தது. சண்டையின்போது இரு தரப்புகளாலும் நேர்ந்த பாதிப்புகளுக்கு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னெடுப்புகள் மூலமாகப் பரிகாரம் காணுமாறு சமீபகாலமாக இலங்கை அரசை நாம் ஊக்குவித்து வந்துள்ளோம்.
நாங்கள் இவ் ஆணைக்குழுவின் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்தோம். அதேவேளை, இலங்கை இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமென தெரிந்து கொண்டோம். நாங்கள் இணைந்து செயல்பட்டோம். இதர நலன்விரும்பி நாடுகளைப்போன்று மனித உரிமைகள் தூதுவர் அலுவலக உதவிகளைப் பெறுமாறும் இலங்கையை ஊக்குவித்தோம்.
போரிலிருந்து விடுபட்டு, போருக்குப் பின்னர் எழுந்த சூழ்நிலைகளைச் சாதுரியமாகக் கையாண்ட நாடுகளும் சபையில் அங்கம் வகிக்கின்றன. அந்நாடுகளின் அனுபவங்களிலிருந்து நன்மைகளைப் பெறுவதற்கும், சபையோடு இணைந்து இருப்பதற்கும் நாம் இலங்கையை ஊக்குவித்து வந்துள்ளோம்.
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும், கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இல்லையேல், எட்டும் சமாதானம் நிலைத்துநிற்கும் என்பதற்கில்லை.
இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடப்பாடுகளை நிறைவேற்ற மேலதிக நடவடிக்கைகள் தேவை. இவ்விவகாரம் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இடம்பெறவில்லை.
எனவே, இதற்கும் மேலாக மனித உரிமைகள் தூதுவர் அலுவலகத்தோடு இணைந்து செயல்படுவதற்கும், ஆக்கபூர்வமான ஆலோசனைகளைப் பெறுவதற்கும் இப்பிரேரணை இலங்கையை வலியுறுத்துகிறது என ஐ.நா விற்கான அமெரிக்கத் தூதுவர் தனதுரையில் தெரிவித்தார்.