கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான அறிகுறிகள் முழுமையாகத் தென்பட்டுள்ள நிலையில் கட்சித் தாவல்களும், பேரம் பேசுதல்களும் அசுர வேகத்தில் இடம்பெற்று வருகின்றன என நம்பகரமாகத் தெரியவருகின்றது.
கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களும், கிழக்கின் பிரபலமிக்க அரசியல் பிரமுகர்களும் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன்முறையாக கிழக்கு மாகாணத் தேர்தலில் குதிப்பதையடுத்து, கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடத் தற்போதுள்ள தமிழ் மாகாணசபை உறுப்பினர்களில் ஒருவரான இரா. துரைரெத்தினம் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அண்மையில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பில் பேச்சு நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பில் நால்வர் தெரிவாகியிருந்தனர். ஆனால், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தல் களத்தில் குதிப்பதனால் மூவரை மாத்திரம் களமிறக்கிப் போட்டியிட பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வியூகம் வகுத்துள்ளது.
இதனால் பிள்ளையான் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூட்டமைப்புடன் இணையத் தீர்மானித்து இது தொடர்பான பேரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன்முறையாக கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் முஸ்லிம் கட்சிகளுக்கும், கூட்டமைப்பிற்கு எதிரான தமிழ்க் கட்சிகளுக்கும் தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுப்பதில் முனைப்புக் காட்டி வருவதாக தெரிகிறது.