அதிகாரப் பகிர்வை வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல், மலையக தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை நேற்று தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் வைத்து சந்தித்த போதே மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்தும் இந்தியா கரிசனை கொள்ள வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைபபு மற்றும் சிறிலங்கா அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை.
மலையக மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே அதிகாரப் பகிர்வு வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் தமிழர்கள் வாழும் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.
உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் மலையக சமூகத்தினரின் தற்போதைய நிலைமையை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது மலையக தமிழர்கள் வறுமையிலும், சுகாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இத்தகைய சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளை உறுதிப்படுத்தியுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டியது இந்தியாவின் பொறுப்பு' என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் மனோ கணேசன் எடுத்துக் கூறியுள்ளார்.