ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு அமெரிக்கா விடுத்திருந்த கோரிக்கையை முன்னர் நிராகரித்திருந்த சிறிலங்கா அரசாங்கம், தற்போது தனது முடிவை மாற்றி ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தத் தீர்மானித்துள்ளது.
இதனால் எண.ணெய் இறக்குமதி தொடர்பில் ஈரானுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக குற்றம் சுமத்தி அந்நாட்டின் மீது எண்ணெய் ஏற்றுமதித் தடையை அமெரிக்கா விதித்திருந்தது. அத்துடன், அடுத்த ஆறு மாதங்களுக்கு ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறும் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டிருந்தது.
அவ்வாறு எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ளாத பட்சத்தில், இந்நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு உட்பட்டு ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் முடிவடையவுள்ள நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய மூன்று கப்பல் எண்ணெயை நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சபுகஸ்கந்தவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பயன்படுத்தப்படும் பெருமளவான எண்ணெய் ஈரானிடம் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா அரசாங்கம் இத்தீமானத்தை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் தடைகளை அடுத்தே இத்தகைய ஒரு முடிவை எடுக்க வேண்டி வந்துள்ளதாக சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கடந்த கூட்டத் தொடரில் அமெரிக்கா கொண்டு வந்த சிறிலங்கா மீதான தீர்மானம் மற்றும் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டனை அடுத்த மாதம் 18ஆம் திகதி சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்திக்கவுள்ளமையும் தெரிந்ததே.