நாட்டைக் கூறுபோடக்கூடிய வகையில் அமைந்துள்ள 13வது திருத்தத்தை அரசு உடன் இரத்துச்செய்ய வேண்டும் எனவும் 13 பிளஸோ அல்லது மைனஸோ இவற்றைப் பற்றி அரசு இனிக் கதைக்கக்கூடாது என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
13 பிளஸுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணங்கினார் என இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ள நிலையிலேயே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இவ்வாறானதொரு அறிவிப்பை மீண்டும் விடுத்துள்ளது.
13 பிளஸ் குறித்து இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மேலும் கூறியவை வருமாறு:
13 பிளஸோ அல்லது மைனஸோ இவற்றைப் பற்றி இலங்கை அரசு இனிக் கதைக்கக்கூடாது. 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். நாட்டைக் கூறுபோடக்கூடிய வகையில் அமைந்துள்ள அந்தச் சட்டத்தை இலங்கை அரசு உடன் இரத்துச்செய்யவேண்டும் என நாம் மீண்டும் வலியுறுத்திக் கூறவிரும்புகின்றோம்.
13 பிளஸ் குறித்து இந்தியத் தரப்புத்தான் கருத்து வெளியிடுகின்றது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸுக்கு இணங்கியிருக்கமாட்டார். அவர் இதற்கு இணங்கவும் கூடாது.
எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொய் சொல்கின்றாரா அல்லது இந்தியத் தரப்பு பொய் சொல்கின்றதா என்பதை இலங்கை அரசு எமக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.