செவ்வாய்கிழமையும், புதன்கிழமையும் நாடாளுமன்றத்திலே நடைபெற இருக்கின்ற ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம் பற்றிய விவாதத்தில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயமாக கலந்துகொண்டு உண்மைகளை துணிச்சலுடனும், நேர்மையுடனும் எடுத்து கூறுவதன் மூலம் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
3ம், 4ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம் பற்றிய விவாதம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இந்த சூழலிலேயே இலங்கை நாடாளுமன்றத்தில், ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இரண்டு முழு நாள் விவாதம் நடைபெற ஏற்பாடு ஆகியுள்ளது. நடைபெற உள்ள விவாதம், கற்றுக்கொண்ட ஆணைக்குழு பற்றிய விவாதம் அல்ல. இது ஜெனீவா தீர்மானம் பற்றிய விவாதம் ஆகும். இந்த விவாதத்தில் இரண்டு நாட்களும் கலந்துகொண்டு எமது நிலைப்பாடுகளை, கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று ஆளுமையுடன் எடுத்து கூறும் கடப்பாடு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.
இலங்கை வாழ் தமிழ் மக்களை திரும்பி பார்க்க மறுத்த சர்வதேச சமூகம் இன்று இலங்கை தமிழ் மக்களை திரும்பி பார்க்க தொடங்கி இருக்கின்றது. இதன் அடையாளம்தான் ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம். இதனால் இன்று தமிழ் இனம் ஒரு வரலாற்று திருப்புமுனையில் நிற்கிறது.
ஜெனீவா தீர்மானம் தொடர்பில், எமது உள்நாட்டு பிரச்சினை உலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையே பெரும் மகா பாவ காரியமாக அரசின் இனவாத அரசியல்வாதிகள் திரும்ப, திரும்ப கூறி வருகிறார்கள். உண்மையில் நமது உள்நாட்டு மனித உரிமை பிரச்சினையை உலகத்திற்கு முதன் முதலில் கொண்டு சென்றது, அன்று எதிர்கட்சி எம்பி என்ற முறையில் இன்றைய அரசாங்கத்தின் அதிபர் மாண்புமிகு மகிந்த ராஜபக்ச ஆகும்.
தென்னிலங்கையில் அன்றைய ஐதேக அரசின் மனித உரிமை மீறல்களை எதிர்த்தே மகிந்த ராஹபக்ச ஜெனீவா போனார். அவருடன் அன்று கூட இருந்தது, இன்றைய அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும், எமது இன்றைய ஜெனீவா பிரதிநிதி தமரா குணநாயகமும்தான். அன்று கொல்லப்பட்டது சிங்கள மக்கள். இன்று கொல்லப்பட்டது தமிழ் மக்கள். அன்று சிங்கள மக்களின் பிரச்சினை ஜெனீவா கொண்டு செல்லப்பட்டதை போலவே, இன்று தமிழ் மக்களின் பிரச்சினை ஜெனீவா போயுள்ளது. இந்த உண்மைகள் பாராளுமன்றத்தில் எடுத்து கூறப்பட வேண்டும்.
விடுதலை புலிகளின் மனித உரிமை மீறல்களை வரிசைபடுத்துவதன் மூலம் தமது படுகொலைகளை மூடி மறைக்கவும் அரசின் இனவாத அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள். விடுதலை புலிகள் தொடர்பில் ஐநா உட்பட உலக சமூகம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதும், உலகம் இலங்கை அரசின் போர் முயற்சிகளுக்கு முழுமையாக துணை நின்றதும் பாராளுமன்றத்தில் எடுத்து கூறப்பட வேண்டும்.
போர் முடிந்த சில நாட்களின் பின் 2009 மே 26 அன்று, பயங்கரவாதத்தை முறியடித்தமைகாக என்று கூறி இலங்கை அரசை பாராட்டி இதே ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் 11ம் விசேட மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன் பிறகு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கும், மீள் குடியேற்றங்களை நடத்தி முடிக்கவும், போர் குற்றங்கள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான விசாரணைகளை முன்னெடுக்கவும் இலங்கை அரசு தவறிய காரணங்களினாலேயே இன்றைய தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்ற அடிப்படை உண்மை பாராளுமன்றத்தில் எடுத்து கூறப்பட வேண்டும்.
நடைபெற உள்ள விவாதம், கற்றுக்கொண்ட ஆணைக்குழு பற்றிய விவாதம் அல்ல. இது ஜெனீவா தீர்மானம் பற்றிய விவாதம் ஆகும். இந்த விவாதத்தில் இரண்டு நாட்களும் கலந்துகொண்டு எமது நிலைப்பாடுகளை, கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று ஆளுமையுடன் எடுத்து கூறும் கடப்பாடு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.