கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மாநகரசபை உறுப்பினர் பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்வதாக சிறிலங்கா ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மிலிந்த மொரகொட அறிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையில் தனது கட்சியின் சார்பில் முழுநேர தலைமைத்துவத்தை வழங்க வேண்டியுள்ள நிலையில், தான் தற்போது வகிக்கும் பொறுப்புக்கள் அக்கடமையை நிறைவேற்றுவதற்கு தடையாகவுள்ளதாக மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.
அதனாலேயே கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மாநகரசபை உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்வதற்கு தான் தீர்மானித்ததாக இன்று நடைபெற்ற எதிர்க்கட்சி குழுவின் கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொழும்பு மாநகர சபையில் தனது கட்சியின் சார்பில் புதிதாக நியமிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர் விரும்புமிடத்து, அவருக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்கு தான் எந்த நேரமும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்குத் தாவிய கொழும்பு மாநகரசபை உறுப்பினர் முஹமட் மஹ்ரூபிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, உலக வங்கியில் உயர் பதவி ஒன்றை வகிக்க இருப்பதனாலேயே மிலிந்த மொரகொட தனது இரு பதவிகளையும் இராஜினாமாச் செய்வதாக அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்த ஆட்சிக் காலத்தின் போது விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளின் போது அக்கட்சியின் சார்பில் கலந்து கொண்டிருந்த மிலிந்த மொரகொட பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சியில் இணைந்து கொண்டிருந்தார்.