சிறிலங்காவின் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்காவின் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரிவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய ஜீன் லம்பேர்ட் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
சிறிலங்காவின் சிறைச்சாலைகளில் நூற்றுக்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான அரசியல் கைதிகள் தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து தமிழ்க் கட்சிகள் எம்மிடம் தெரிவித்துள்ளன.
அதேபோன்று தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரியுள்ள சரத் பொன்சேகா தொடர்பிலும் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற போரின் போது இடம்பெயர்ந்த மக்கள் பலர் இன்னும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.
இத்தகைய விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த ஐரோப்பிய நாடாளுமன்ற குழுவினர் வடக்குக் கிழக்கு மற்றும் தெற்கின் அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தர்' என ஜீன் லம்பேர்ட் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் மற்றும் மனிதவுரிமைகள் நிலைவரங்களை ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரிவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜீன் லம்பேர்ட் தலைமையில் இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்தது.
'இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது என்ன நடந்தது என்பதற்கு பதிலளிக்கப்பட வேண்டியது அவசியமானது என தமது பயணத்தின் முடிவில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு நேற்றுத் தெரிவித்திருந்தது.
அத்துடன், உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் இக்குழு குற்றம் சுமத்தியிருந்தமை தெரிந்ததே.