இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக அரசாங்கம் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்காது, தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர் திஸ்ஸ விதாரண வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று, அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புறக்கணிக்கக் கூடாது என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக சிறிலங்காவின் அமைச்சர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளதாவது:
'இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது ஒரு முக்கிய விவகாரமாக காணப்படுகின்றது. எனவே இப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பங்களிப்புக்களை ஏனைய அரசியல் கட்சிகளும் வழங்க வேண்டுமே தவிர, கடந்தகால தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பது நாகரீகமானதல்ல.
நாளை மே மாதம் 01ஆம் திகதி. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தினம். இத்தினத்தில் உழைக்கும் மக்களின் எழுச்சிகளுக்காக அனைத்துக் கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து பல்வேறு கூட்டங்களை நடத்துகின்றது. இவ்வாறு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தில் பங்கெடுக்கும் இரு பிரதான தரப்பினரும் வெளிப்படைத் தன்மையை பாதுகாப்பதுடன், இவ்விரு தரப்பினரும் நேர்மையுடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் பாரிய பொறுப்பு. எனவே இளப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் போது சிறிலங்கா அரசாங்கம் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கக்கூடாது.
இலங்கையின் முக்கியமானதொரு பிரச்சினைக்கு நிபந்தனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடைத்துவதாயின், தேவையற்ற சந்தேகங்களே ஏற்படும். தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் எல்லைகளிட்டோ, நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டோ பேசுவதால் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை. இதனை இருதரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோன்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குரிய சந்தர்ப்பங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தவறவிடக்கூடாது. எனவே அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தையின் போது காணப்படும் இணக்கப்பாடுகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் வைக்கும் போது, அதில் பங்குபற்றுவது குறித்து ஆலோசிக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.