சிறிலங்கா படைத்தரப்பினர் வடபகுதியில் மேற்கொண்டு வரும் அத்துமீறல் நடவடிக்கைகளை இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் பார்வையிட வேண்டும் என தமிழ் மக்கள் விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையில் ஆறு நாள் பயணத்தை மேற்கொண்டு இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு நாளை செல்லவுள்ள நிலையிலேயே, அவர் இவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா படைத்தரப்பினட வடபகுதியில் மேற்கொண்டு வரும் அடாவடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களை இன்னும் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல், அவர்கள் தடுப்பு முகாம்களில் தொடர்ந்து தங்கியிருக்கின்றனர். இந்நிலையில், முல்லைத்தீவு மற்றும் வெலிஓயா ஆகிய பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், யாழ்.குடாநாட்டில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வரும் உயர் பாதுகாப்பு வலயங்கள் முள்கம்பி வேலியிடப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருகின்றது.
இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்த உயர் பாதுகாப்பு வலயங்களில் வாழ்ந்து வந்த மக்கள் அப்பிரதேசங்களில் படிப்படியாக மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் தற்போது மேலும் பலப்படுத்தப்பட்டு வருகின்றமை, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கேள்விகளை எழுப்புகின்றது.
இது இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தமது மீள்குடியேற்றம் தொடர்பில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் தமது காணிகளைக் கூட துப்பரவு செய்வதற்கு சிறிலங்கா கடற்படையினர் அனுமதிப்பதில்லை என முறைப்பாடு செய்கின்றனர்.
அதேவேளை, வடபகுதியில் பௌத்த விகாரைகளை நிர்மாணித்து, அப்பிரதேசத்திற்கு அண்மையாக படைத்தரப்பினருக்கு வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தி, அவர்களை அங்கு நிரந்தரமாக குடியமர்த்த சிறிலங்கா அரசாங்கம் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், இலங்கைக்கு வரும் இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வடபகுதிக்குச் சென்று இப்பிரச்சினைகள் குறித்து தமிழ் மக்களிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும்' என அவர் கொழும்பு ஊடகத்திடம் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையிலேயே, சுரேஸ் பிரேமச்சந்திரன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன், இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்வரும் 17ஆம் திகதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் என அவர் இன்னொரு ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.